07வது ஆசிரியர் மாநாடும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரியர் வான்மை விருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் ஏழாவது ஆசிரியர் மாநாடும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வான்மை விருத்தி நிலையத்தில் (25 )செவ்வாய்க்கிழமை ஆசிரியர் வள நிலையத்தின் முகாமையாளரும் பிரதான விரிவுரையாளருமான ஏ. ரியாஸ் (SLTES) அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடை தாண்டலுக்கான இத வடிவங்களைப் பூர்த்தி செய்து வான்மை விருத்திப் பயிற்சி பெற்றுக் கொண்ட ஏழாவது தொகுதி ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையிலேயே மேற்படி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ஆசிரியர் மாநாடும் விமர்சையாக இடம் பெற்றது.
நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ரமீஸ் (SLEAS), காத்தான்குடிக் பிரதேசக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம். ஹகீம் (SLEAS), தமிழ் பாடத்துக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். முபாஸ்தீன் (SLEAS), ஆரம்பக் கல்விப் பிரிவின் ஆசிரிய ஆலோசகர் திருமதி தஸ்லிமா ரிஸ்வி, காத்தான்குடியின் முக்கிய சமூக செயற்பாட்டாளர் அல்ஹாஜ் முஜீப் ஜுனைத் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு ஆசிரிய வள நிலையத்தின் சிறப்பான செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆசிரியர்கள் எதிர்காலத்தில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் சான்றிதழ் பெற்றுக் கொண்ட ஆசிரியர் குழாமினால் உரைகள், பாடல்கள், கவிதைகள் என பல்சுவை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு நிகழ்வின் முக்கிய அம்சமாக ஆசிரியர் தரம் 2-II க்கான வினைத்திறன் தடை தாண்டல் இத வடிவங்களைப் பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர் குழுவினர் தமக்கு வான்மையை விருத்தி செய்வதற்கு உதவிய வலயத்தின் முகாமையாளரும் பிரதான விரிவுரையாளருமான ஏ. ரியாஸ் (SLTES) அவர்களை கௌரவித்ததோடு வள நிலையத்துக்காக அன்பளிப்புகளையும் வழங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment